கும்பகோணம் சித்த வைத்தியர் வீட்டில் தோண்ட, தோண்ட எலும்புகள்.. சூடுபிடிக்கும் கொலை வழக்கு


கும்பகோணம் சித்த வைத்தியர் வீட்டில் தோண்ட, தோண்ட எலும்புகள்.. சூடுபிடிக்கும் கொலை வழக்கு
x

அசோக் ராஜன், கேசவமூர்த்தி

மனித உடல் உறுப்புகளை விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி (வயது 47). சித்த வைத்தியம் செய்து வந்த இவர், சமீபத்தில் தன்னிடம் சிகிச்சை பெற வந்த அசோக்ராஜன் (வயது 27) என்ற வாலிபரை கொன்று, தனது வீட்டில் புதைத்ததாக கைது செய்யப்பட்டார்.

சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்த அசோக்ராஜன் தீபாவளிக்கு ஊருக்கு சென்றிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அசோக்ராஜன் ஆண்மைக் குறைவு சிகிச்சைக்காக கேசவமூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் ஓரினச்சேர்க்கையில் கேசவமூர்த்தி ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் அசோக்ராஜனுக்கு ஆண்மை வீரியத்திற்கான மருந்தை கொடுத்ததாகவும், அந்த மருந்தை சாப்பிட்ட பின்னர் மயங்கி விழுந்ததால் அவர் இறந்து விட்டதாக நினைத்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்ததாகவும், கேசவமூர்த்தி போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் அசோக்ராஜனின் உடலை தோண்டி எடுத்தனர். கைது செய்யப்பட்ட கேசவமூர்த்தியை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். மனித உடல் உறுப்புகளை விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், கேசவமூர்த்தி வீட்டு வளாகத்தில் போலீசார் தோண்டும்போது மனித தாடை எலும்பு கண்டெடுக்கப்பட்டது.

நேற்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்டினர். அப்போது, சிறிய அளவில் சுமார் 20 எலும்பு துண்டுகள் கிடைத்தன.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சோழபுரத்தை சேர்ந்த மற்றொரு வாலிபர் மாயமாகி உள்ளார். அவரையும் இதேபோல் கேசவமூர்த்தி மருந்து கொடுத்து கொன்று உடலை புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

எனவே, கேசவமூர்த்தி வீட்டு வளாகத்தில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள், மனித எலும்புகளா அல்லது காணாமல் போன வாலிபரின் எலும்புகளா என்பதை அறிய ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


Next Story