லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். நரசிம்மரின் 9 வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திருமாலின் வடிவத்தில் இங்கு வீற்றிருக்கிறார். திருமாலின் 5 வகையான பிரதிஷ்டைகளில் ஒன்றான அஸ்தாபன பிரதிஷ்டை அதாவது அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபமாக ஏழரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். அவர் தாயார் லட்சுமி தேவியை தொடை மீது அமர்த்தி ஒருவருக்கொருவர் அணைத்தபடி கம்பீரமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களை பார்ப்பதாக இருப்பது தனி சிறப்பு.

இந்த கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், சூரிய பிரபை, அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திரபிரபை, யாளி வாகனம், போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கருட சேவை யும், 28-ந் தேதி (செவ்வாய் கிழமை) தேர் திருவிழாவும், 29-ந் தேதி (புதன்கிழமை) திருமஞ்சனமும், 30-ந் தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.


Next Story