சென்னையில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து விபத்து - தொழிலாளி உயிரிழப்பு


சென்னையில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து விபத்து - தொழிலாளி உயிரிழப்பு
x

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முருகானந்தத்தின் உயிரற்ற உடலை போலீசார் மீட்டனர்.

சென்னை,

சென்னை கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியில் தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் பாதாள சாக்கடைக்கான பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளி முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கிக் கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மண் சரிவில் சிக்கிய முருகானந்தத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முருகானந்தத்தின் உயிரற்ற உடலை போலீசார் மீட்டனர்.

தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story