முதல்-அமைச்சருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்திப்பு


முதல்-அமைச்சருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்திப்பு
x

தமிழ்நாடு அரசு பெ.சண்முகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

1992-ம் ஆண்டில் அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தியில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 269 பேர் பழங்குடியின மக்களை கடுமையாக தாக்கியும், வீடுகள், உடமைகளை சூறையாடியதுடன் குழந்தைகள் உட்பட பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொடுமையான சித்தரவதைகளை அரங்கேற்றினர். இந்த சம்பவம் வெளிவுலகிற்கே தெரியாமல் மூடி மறைத்தனர். இச்சம்பவத்தை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் தோழர் ஏ. நல்லசிவன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு வாச்சாத்தி கிராமத்திற்கே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கொடுமைகளை கேட்டறிந்ததுடன் இச்சம்பவத்தை கண்டித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடந்த குற்றத்தை மூடி மறைக்கவே முயற்சித்தனர். அதையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வாச்சாத்தி மக்களும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் 30 ஆண்டு காலமாக நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 269 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்தது. இந்த நீண்ட, நெடிய போராட்ட பயணத்தில் தோழர் பெ.சண்முகம் தொடக்க காலம் முதல் அயராது பணியாற்றியவர். இதனை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தோழர் பெ. சண்முகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி இன்று கவுரவித்துள்ளது. அவருக்கு விருது வழங்கியதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து நன்றியினைத் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது,

1. மிக்ஜம் புயல் மற்றும் கன மழையினால் சென்னை உள்ளிட்ட அருகமை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போதும், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போதும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், அனைத்து துறை ஊழியர்களும் களத்தில் நின்று துரிதமாக பணியாற்றி வெற்றிகரமாக மக்களின் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அத்தோடு மத்திய பாஜக அரசு தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளுக்கு மறு சீரமைப்பு பணிகளுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத நிலையில் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் மக்களுக்கு ரூ. 6,000/- மற்றும் குறைந்த பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ரூ. 1,000/- நிவாரண நிதி அளித்து மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டியது. தமிழக அரசின் துரித மீட்பு நடவடிக்கைகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்ததற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

2. மதுரை மாநகராட்சி, துணை மேயர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் தி. நாகராஜனை சமீபத்தில் சமூக விரோத சக்திகள் கொலை செய்யும் நோக்கோடு பயங்கர ஆயுதங்களுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற போது நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், சமூக விரோத சக்திகள் எப்போது வேண்டுமானாலும் தோழர் தி. நாகராஜன் மீது மீண்டும் கொலைவெறித் தாக்குதல் தொடுக்கும் அபாயம் இருப்பதால் அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் முதல்-அமைச்சரிடம் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story