அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 Dec 2023 8:24 AM GMT (Updated: 5 Dec 2023 9:07 AM GMT)

சென்னையில் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை,

`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்த நிலையில், புயல், மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று மக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்" என்று தெரிவித்துள்ளார்.



Next Story