நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு


நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு
x

போதையில் நண்பரை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை

பூந்தமல்லி,

சென்னை முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ.நகர், நக்கீரன் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 49). இவர் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் சாலை ஓரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவருடன் சிவகுமார் (38) என்பவரும் ஒன்றாக தங்கி, வேலை செய்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

2021-ம் ஆண்டு குடிபோதையில் நண்பர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த சிவகுமார், உருட்டுக்கட்டையால் நண்பர் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில் சிவகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.


Next Story