மூதாட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


மூதாட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x

மூதாட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த பெரியபாளையத்தை சேர்ந்தவர் ருக்மணி (வயது 75). இவர் கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டை கோட்டகுப்பம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (22) என்பவர் வீட்டுக்குள் நுழைந்து ருக்மணி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மல் மற்றும் 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார். மேலும் அந்த நபர் ருக்மணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து வீட்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நாகராஜை கைது செய்தனர்.

இந்த திருட்டு மற்றும் கொலை சம்பந்தமான வழக்கு திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வுகோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி கணபதிசாமி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அத்துமீறி நுழைந்து கொலை செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டம் 449-ன் படி ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் செலுத்த தவறினால் 6 மாதம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்தார்.

நகை திருட்டில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் மூதாட்டி என்றும் பார்க்காமல் கொலை செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டம் எண் 302-ன் படி கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் மற்றும் செலுத்த தவறினால் 6 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்து நகையை கொள்ளை அடித்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டம் எண் 380-படி 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்த நீதிபதி கணபதிசாமி இந்த அனைத்து தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ருக்மணி மகன் ஜெயச்சந்திரனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி கணபதி சாமி உத்தரவிட்டார். தீர்ப்புக்கு பின் நாகராஜை பெரியபாளையம் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ரவிச்சந்திரன் வாதாடினார்.


Next Story