'மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேல் கடனுதவி' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்


மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேல் கடனுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
x

தகுதியின் அடிப்படையில் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவி குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுய உதவி குழுக்களின் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடன் உதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருவதாகவும், தகுதியின் அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் வங்கி கணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

2022-23ம் நிதியாண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், 25 ஆயிரத்து 219 கோடி ரூபாய் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டும் அந்த இலக்கை விட அதிக அளவில் வங்கிக்கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Next Story