அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை மீண்டும் விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை மீண்டும் விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக தற்போது இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதன்பேரில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளின் அடிப்படையில், மத்திய அமலாக்கப்பிரிவு தனியாக செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. தன் மீதான 3 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, இந்த வழக்குகளை எல்லாம் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள், பணம் கொடுத்து ஏமாந்த புகார்தாரர்கள் பலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் எல்லாம் ஐகோர்ட்டு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இந்த 3 வழக்குகளும் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் ஆஜராகி, "அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க நபராக உள்ளார். ஏற்கனவே அவர் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல இளைஞர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்து அப்பட்டமான மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மீதும், அவரது நண்பர்கள் மீதும் உள்ள பண மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே அவருக்கு எதிரான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எனவே, அவர் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது" என்று வாதிட்டார்.

அதேபோல புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், "ஏழ்மை நிலையில் உள்ள பல இளைஞர்கள் அரசு வேலை கிடைக்கும் என்ற மோகத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். எனவே அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யப்பட்டுவிட்டால் கொடுத்த பணம் பறிபோய் விடும். எனவே இந்த வழக்குகளை ரத்து செய்யக்கூடாது. தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டனர்.

போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ் திலக் ஆஜராகி, செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.

இந்நிலையில் அந்த வழக்குகள் மீது இன்று உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story