மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளருக்கு பிடிவாரண்ட் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
![மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளருக்கு பிடிவாரண்ட் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளருக்கு பிடிவாரண்ட் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/01/1366109-hic.webp)
கோப்புப்படம்
மதிப்பெண் சான்று வழங்காத விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதிப்பெண் சான்று வழங்காத விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பழனியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் கடந்த 1992-96 வரையிலான கல்வி ஆண்டில் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்ட படிப்பு முடித்தேன். இறுதியாக தேர்வு தேர்ச்சி பட்டியலில் எனது பெயர் தேர்வு எண் இல்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது பல்கலைக்கழகத்திற்கு சென்று விவரம் கேட்க சொன்னார்கள்.
பின்னர் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது முழுமையாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாததால் உங்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அனைத்து தேர்வுகளிலும் எழுதி தேர்ச்சி பெற்றேன். பின்னர் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் கேட்டு விண்ணப்பித்தேன். இதுவரை மதிப்பெண் பட்டியல் தரவில்லை. ஆகவே எனது பொறியியல் படிப்பிற்கான அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்த மதிப்பெண் சான்று வழங்க உத்தரவிடவேண்டும்" என்று கடந்த 2020 ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தனது பொறியியல் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்று கோரி கல்லூரி நிர்வாகத்திடமும் பல்கலைக்கழகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளார். வழக்கு தாக்கல் செய்தும் உள்ளார். எனவே மனுதாரர் கேட்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகம் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேரில் ஆஜராக நேரிடும் என கடந்த விசாரணையின் போது நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மதிப்பெண் தேர்ச்சி சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த நீதிபதி மதுரை காமராசர் பல்கலைக் பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம் செயல்படுத்தி பல்கலைக்கழக பதிவாளரை நீதிமன்றத்தில் ஜூலை 7 ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.