ஸ்ரீபெரும்புதூர் அருகே மான்கொம்பு, கத்தி பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூர் அருகே மான்கொம்பு, கத்தி பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே மான்கொம்பு, கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் கிராமத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வளர்புரம் ஊராட்சியில் விஜய் என்பவரின் தோட்டத்தில் மர்ம நபர்கள் கும்பலாக கூடி இருந்ததை கண்டு போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

போலீசாரை கண்டதும் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். மர்ம நபர்கள் கூடிய இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து பட்டா கத்திகள், மான் கொம்புகள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்படும் பொருள்கள் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் பேரில் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் மர்ம நபர்கள் வளர்புரம் ஏரி கரை அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த வளர்ப்புரம் பகுதியை சேர்ந்த விஜய் வயது (27), டேவிட் (25), திருவள்ளூர் மாவட்டம் வெங்காத்தூர் பகுதியை சேர்ந்த அன்பு(25) ,உளுந்தை பகுதியை சேர்ந்த நாகராஜ் (24), ஞானபிரசாத் (22), மண்ணுர் பகுதியை சேர்ந்த குயிக் சுரேஷ் (25) ஆகிய 6 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமானது. இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story