மேகதாது அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம்


மேகதாது அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம்
x

கோப்புப்படம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மத்திய நீர்வளத்துறை மந்திரியை அவர் சந்திக்கிறார்.

சென்னை,

மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசுவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவர் நாளை (புதன்கிழமை) மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செஷகாவத்தை சந்தித்து பேச உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சருடன் நேற்று காலை ஆலோசனை நடத்திய அமைச்சர் துரைமுருகன் மாலை நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜூன் மாதத்தில் கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டிய காவிரி நீரின் அளவு மற்றும் ஜூலை மாதத்தில் திறந்து விட வேண்டிய காவிரி நீரின் அளவு குறித்து ஆலோசனை நடத்தி அது தொடர்பான ஆவணங்களுடன் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதம் நடத்த உள்ளதால் மத்திய ஜல் சக்தி துறை மந்திரியை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்தியில் பாஜக அரசும், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசும் அமைந்துள்ளதால் இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளதால் மேகதாது விவகாரம் இரு மாநில அரசியலில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story