சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கூலி தொழிலாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கூலி  தொழிலாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை
x

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 14 வருடம் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போச்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா குப்பம் கிராமம் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 54), கூலி தொழிலாளி. அவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி ஒரு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியிடம் மது போதையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது அங்கு வந்த அந்த சிறுமியின் தங்கையிடமும் அவர் பாலியல் தொல்லையில் ஈடுபட முயற்சி செய்து உள்ளார். அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த சிறுமிகளின் தாய் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவர் தப்பியோடி விட்டார்.

இது குறித்து சிறுமிகளின் தாய் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூபாலனை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறி உத்தரவிட்டார். அதில் பூபலானுக்கு போச்சோ பிரிவின் கீழ் 10 வருடமும், அத்துமீறு வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்கு 2 வருடமும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2 வருடம் என 14 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு 2 பேருக்கும் அரசு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார். பின்னர் பூபாலனை போலீசார் கைது செய்து வேலூர் சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.


Next Story