தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு
x
தினத்தந்தி 19 Sep 2023 5:03 AM GMT (Updated: 19 Sep 2023 6:21 AM GMT)

நாமக்கலில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் உணவகங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் இயங்கி வந்த தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று சுஜாதா என்பவர் தனது குடும்பத்தினருடன் சவர்மா உள்ளிட்ட சில உணவு வகைகளை வாங்கியுள்ளார். இதனை குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். இதனை அவரது 9 ம் வகுப்பு படிக்கும் மகள் கலையரசியும் (14) சாப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். மேலும் அவருடைய உறவினர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்ற உணவுகள் தயாரிக்க தடை விதிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் விதிமுறைகளை பின்பற்றி சரியான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவா, உணவுகளை பாதுகாக்க முறையான பிரீசர் வசதி உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும்.

மேலும் இவ்வாறு உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story