12 மணி நேர வேலை சட்டமசோதா நிறுத்திவைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


12 மணி நேர வேலை சட்டமசோதா நிறுத்திவைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

கடும் எதிர்ப்பு

இந்த மசோதாவுக்கு பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்ட, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

ஆலோசனை கூட்டம்

இதைத்தொடர்ந்து 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினரின் கருத்துகளை அறியவும் தமிழக அரசு சார்பில் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் தொழில் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நஜுமுதின், தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தல்

கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அனைத்து கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த நிலையில், நேற்று இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டமசோதா நிறைவேற்றம்

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள், தமிழக சட்டசபையில் கடந்த 21-ந் தேதி "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமசோதா (சட்டப்பேரவை சட்டமசோதா எண்.8/2023)", தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

சமரசம் கிடையாது

அந்த ஆலோசனை கூட்டத்தில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமசோதா (சட்டப்பேரவை சட்டமசோதா எண்.8/2023)" என்ற சட்டமுன்வடிவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்குப போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும், இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும், தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, தொழிலாளர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவு அக்கறை கொண்டுள்ளது என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர்கள் எடுத்துக்கூறினார்கள்.

அரசு பரிசீலிக்க வேண்டுகோள்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துகளை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.

ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவை. தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும். நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது.

தொழிலாளர் நலன் காக்கும் அரசு

தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து தி.மு.க. அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. தற்போது அதே சிந்தனையைத் தாங்கி, தலைவர் கருணாநிதி வகுத்துத் தந்த பாதையில், அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

தி.மு.க. அரசு எப்போதுமே தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக என்றென்றும் விளங்கும் என்பதற்கு கீழ்க்காணும் திட்டங்களே சான்றாகும்.

தனி அமைச்சகம் உருவாக்கம்

1969-ல் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, "தொழில், தொழிலாளர் நலம், கூட்டுறவு" என ஒன்றாக இருந்த 3 துறைகளில் இருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித்துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கியது; ரத்தம் சிந்திப் போராடி, உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமைகள் குறித்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில், 1969-ம் ஆண்டில் மே முதல் நாளைச் சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது;

1969-ல் அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளருக்கு நியாயமான கூலி வழங்க வகை செய்தது; பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கற் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்கு தொழில் முகவர்களிடம் பேசி, அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது;

தொழில்-விபத்து நிவாரண நிதி

தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் "பணிக்கொடை" வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது; விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களை காப்பதற்காகத் தொழில்-விபத்து நிவாரண நிதித் திட்டத்தை உருவாக்கியது;

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துடன் விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம், விவசாயத் தொழிலாளர் நலவாரியம், மகளிர் நலவாரியம், மாற்றுத் திறனாளிகள் நலவாரியம், கிராமக் கோவில் பூசாரிகள் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி உதவிகள் செய்தது தி.மு.க. அரசு.

தமிழகம் முதல் இடம்

1990-ம் ஆண்டு மேதின நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நேப்பியர் பூங்காவிற்கு "மேதினப் பூங்கா" எனப் பெயரிட்டு, மேதின நினைவுச் சின்னத்தை நிறுவியர் கருணாநிதி. வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தி.மு.க. அரசு தான்.

முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது, அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியினை ஆராய்ந்து இந்திய தொழிற் குழுமம் ஒரு அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில், இந்தியாவிலேயே தொழில் அமைதி நிலவுவதிலும், தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதிலும் தமிழகம் முதல் இடம் வகிக்கின்றது என்றும், குஜராத் 2-வது இடம் என்றும், ஆந்திரபிரதேசம் 3-வது இடம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய வேலைவாய்ப்பு

தற்போதும், கடந்த 2 ஆண்டு களில், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான தொழிற்சூழலின் காரணமாகவே, தொடர்ச்சியாக பல்வேறு பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் செய்து, அதன்மூலம் நமது இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி வழியில் முனைப்போடு செயல்பட்டு வரக்கூடிய இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால், அவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்களுக்கிணங்க, அவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும்.

மேல்நடவடிக்கை நிறுத்திவைப்பு

அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமசோதா (சட்டப்பேரவை சட்டமசோதா எண்.8/2023)" என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு

முன்னதாக 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. தேர்தல் பணி செயலாளர் அந்திரிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர்.


Next Story