மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி


மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி
x
தினத்தந்தி 13 March 2024 9:24 AM GMT (Updated: 13 March 2024 11:15 AM GMT)

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன் விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? அல்லது பொன்முடிக்கு எம்.எல்.ஏ பதவி மீண்டும் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார். தீர்ப்பை நிறுத்திவைத்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகல் வெளியானதை அடுத்து, அதனை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கப்பட்ட உடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படும். அதன்பின்னர் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story