புழல் சிறையில் பெண் கைதி உள்பட 3 பேரிடம் செல்போன் பறிமுதல்


புழல் சிறையில் பெண் கைதி உள்பட 3 பேரிடம் செல்போன் பறிமுதல்
x

புழல் சிறையில் பெண் கைதி உள்பட 3 பேரிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவு விசாரணை சிறை மற்றும் பெண்கள் சிறையில் சிறை காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புழல் பெண்கள் சிறையில் கஞ்சா வழக்கில் கைது செய்து அடைக்கப்பட்டு உள்ள சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தாரணி (வயது 40) என்ற பெண் கைதி தனியாக அமர்ந்து செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். அவரை சிறை காவலர்கள் கையும் களவுமாக பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விசாரணை சிறையில் உள்ள ஒரு அறையின் அருகே அடிதடி வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டு இருந்த கைதிகளான காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பரத்(28), விஷ்வா(26) ஆகியோர் செல்போனில் பேசி கொண்டிருந்தனர். அவர்களையும் சிறை காவலர்கள் கையும் களவுமாக பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து பெண் கைதி உள்பட 3 கைதிகளுக்கு சிறையில் செல்போன் கிடைத்தது எப்படி? செல்போனில் இவர்கள் யாரிடம் பேசினார்கள்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story