பெரம்பலூரில் சிறுவனிடம் செல்போன் பறிப்பு


பெரம்பலூரில் சிறுவனிடம் செல்போன் பறிப்பு
x

பெரம்பலூரில் சிறுவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் கடந்த சில மாதங்களாகவே இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் அதிகமாக திருடு போய் வருகிறது. தற்போது டிப்டாப் ஆசாமிகள் கியாஸ் சிலிண்டர்களை விட்டு வைக்காமல் திருடி செல்கின்றனர். ஆனால் இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொடுத்தும் போலீசாரால் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேசபுரத்தில் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. வசிக்கும் தெருவில் நேற்று இரவு 13 வயது சிறுவன் சாலையோரமாக செல்போனுடன் நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிறுவனின் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். சிறிது நேரத்தில் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் நகர்ப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வலம் வரும் திருடர்களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story