"எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது" - அமைச்சர் செந்தில் பாலாஜி


எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி
x

எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி, கடந்த 4-ந்தேதி வழங்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,100 கோடி பாக்கி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரூரில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், மத்திய அரசு மின்சாரம் வாங்க தடை விதித்துள்ளதால் மின்தடை ஏற்பட்டுவிடும் என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பதிவில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"மத்திய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் 'PRAAPTI PORTAL' இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை இல்லை.

நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை. சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல் தன்னிச்சையாக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை.

சில காற்றாலை மற்றும் சூரிய ஒளி நிறுவனங்களுக்கு மட்டுமே குறைவான தொகை நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் வழங்கப்பட்டுவிடும்."

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.




Next Story