எடப்பாடி அருகே இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை-குறைபிரசவத்தில் பிறந்ததால் விபரீத முடிவு


எடப்பாடி அருகே குறைபிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் வேதனை அடைந்த தாய், குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

எடப்பாடி:

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இரட்டை பெண் குழந்தைகள்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம், பாலப்பட்டியை சேர்ந்தவர் சபரி. பஞ்சு மில் தொழிலாளி. இவருடைய மனைவி சரளா (வயது 28). இவர்களுக்கு சர்வேஷ் (7) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த சரளா பேறுகாலத்துக்காக கடந்த மாதம் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரளாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த குழந்தைகள் பேறு காலத்துக்கு முன்பாக குறைபிரசவத்தில் பிறந்து விட்டன. இரட்டை குழந்தைகளும் குறைவான எடையுடன் ஆரோக்கியம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரளா தனது உறவினர்களிடம் குழந்தைகளின் நிலையை பார்க்கும் போது இறந்து விடலாம் போல் உள்ளதாக வேதனையுடன் கூறிவந்துள்ளார்.

கிணற்றில் மிதந்தார்

இதை அறிந்த சரளாவின் கணவர் சபரி நேற்று முன்தினம் இரவு தனது மாமனார் வீட்டுக்கு வந்து சரளாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சரளா மற்றும் அவரது இரட்டை குழந்தைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினார்கள். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சரளா மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சரளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொன்று விட்டு தற்கொலை

மேலும் கொங்கணாபுரம் போலீசாருக்கும், எடப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் இறங்கி, 2 பச்சிளம் குழந்தைகளின் உடல்களை மீட்டனர். உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறுகையில், இரட்டை பெண் குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறந்ததால், வேதனையில் இருந்த சரளா தனது குழந்தைகளை கொன்று தற்கொலை செய்ய ெகாள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அதிகாலையில் எழுந்த அவர், அருகில் உள்ள விவசாய தோட்டத்துக்கு சென்று அங்குள்ள கிணற்றில் 2 குழந்தைகளை வீசி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார் என்றனர்.

இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story