மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; சிற்ப கலைஞர் சாவு


மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; சிற்ப கலைஞர் சாவு
x

மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதிய விபத்தில் சிற்ப கலைஞர் பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 55), இவர் மாமல்லபுரம் அருகில் உள்ள அம்பாள் நகர் பகுதியில் ஒரு வீட்டில் தனது மனைவி, 2 மகன்களுடன் வசித்து வந்தார். மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு சிற்பக்கலை கூடத்தில் தினக்கூலி அடிப்படையில் கற்சிற்ப கலைஞராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சுந்தர்ராஜ் தனது மகன் ராகுலுடன் தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலை வழியாக அம்பாள் நகரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

மாமல்லபுரம் அருகே எச்சூர் என்ற இடத்தில் வரும் போது மாமல்லபுரத்தில் இருந்து நெரும்பூர் நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் தந்தை-மகன் இருவரும் தார் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுந்தர்ராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ராகுல் (21) கால்முறிவு ஏற்பட்ட நிலையில் செங்கல்பட்டு அரசுஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story