திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x

திருத்தணி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

திருவள்ளூர்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கன்னிக்கோவில் எதிரே உள்ள பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது இளைய மகன் அசோக் (வயது 23). இவர் பூ மார்க்கெட்டில் மாலை கட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அசோக் தனது அண்ணன் தீனாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அரக்கோணத்தில் உள்ள மாமா வீட்டிற்கு செல்ல உறவினர் கார்த்திக் உடன் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டி சென்றார். அசோக் பின்னால் அமர்ந்து இருந்தார்.

திருத்தணி- அரக்கோணம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, எதிர் திசையில் திருத்தணி பைபாஸ் பகுதியைச் சேர்ந்த கண்ணையன் (50) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு- நேர் மோதி விபத்துக்குள்ளானது.

வாலிபர் பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அசோக், கண்ணையன் ஆகிய இருவரையும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அசோக் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அசோக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story