நேப்பியர் பால செஸ் தீம்: செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டும் வாகன ஓட்டிகள்


செஸ் போர்டு போன்று காட்சி அளிக்கும் சென்னை நேப்பியர் பாலத்தில் வாகன ஓட்டிகள் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னை

சென்னை:

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அந்த வகையில் சென்னையின் பிரதான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் தீம்மில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செஸ் போர்டுகளில் இடம்பெறக் கூடிய கருப்பு வெள்ளை நிறங்களில் கண்கவர் ஓவியத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கும், நேப்பியர் பாலம் வழியாக செல்லக்கூடிய வழிபோக்கர்கள் அனைவருக்கும் ஒரு புது வித அனுபவத்தை தரும் வகையில் இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டும் இந்த ஓவியப் பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்த வழியாக செல்பவர்கள் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் நேப்பியர் பாலத்தை பார்வையிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் நேப்பியர் பாலத்தின் செஸ் தீம்மை கண்டு ரசித்து செல்கின்றனர்.


Next Story