நெல்லை: கவர்னர் பங்கேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - புறக்கணித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்


நெல்லை: கவர்னர் பங்கேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - புறக்கணித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்
x
தினத்தந்தி 3 Feb 2024 5:52 AM GMT (Updated: 3 Feb 2024 6:43 AM GMT)

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொள்ளவில்லை.

நெல்லை,

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கான அழைப்பிதழில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி, விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் அரங்கிற்கு வந்து சேர்ந்தார். ஆனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்றைய தினம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து மேடையில் இருந்த இணை வேந்தருக்கான இருக்கை அகற்றப்பட்டது. தொடர்ந்து கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். ஏற்கனவே அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story