அரசு, தனியார் மருத்துவர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு


அரசு, தனியார் மருத்துவர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு
x

நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், அவர்களுக்கு புரியும்படி மருத்துவர்கள் எழுத வேண்டும் என்று அரசு, தனியார் மருத்துவர்களுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை (prescriptions) எழுதித் தரும் போது மருந்துகளின் பெயரை "கேப்பிட்டல் எழுத்துகள்" (CAPITAL LETTERS) எனும் "பெரிய" ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுதித் தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

நீண்ட காலமாகவே டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை எனும் கருத்தை பொதுமக்களும், மருந்தாளுனர்களும் (pharmacists) கூறி வந்தனர்.

எடுத்துக் காட்டாக, செலின் (வைட்டமின் சி) மற்றும் செலிப் (மூட்டு அழற்சிக்கான மருந்து), மாலாக்வின் (மலேரியாவிற்கான மருந்து) மற்றும் மாஹாக்வின் (ஆன்டிபயாடிக்), அசூ (ஆன்டிபயாடிக்) மற்றும் அசாக்ஸ் (மனநலம்) போன்ற பல மருந்துகளின் பெயர்கள் ஒன்றுக்கொன்று ஒத்து போவதால், மருத்துவர்கள் அவற்றை அவசரமாக எழுதி தரும் போது மருந்தாளுனர்களால் அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு சில நோயாளிகள் தவறான மருந்தை உட்கொண்டதால் ஆபத்தான சிக்கல்களை சந்திக்க நேர்ந்த சம்பவங்கள் நடைபெற்றது.

கடந்த சில வருடங்களாக இந்த புகார் தீவிரமடைந்து வந்த நிலையில், இது குறித்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஒடிசா உயர் நீதிமன்றம், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளிட்டவை புரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் தேசிய மருத்துவ கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசும் ஏற்கனவே அறிவுறுத்தி வந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாங்கள் எழுதித்தரும் மருந்துச்சீட்டில் இடம்பெறும் மருந்துகளின் பெயர்களை, நோயாளிகளுக்கு புரியும் வகையில், தெளிவாக, "கேப்பிட்டல்" எழுத்தில்தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த செயல் சில நிமிடங்கள் மட்டுமே அதிகம் எடுக்கும் என்றும் இதன் மூலம் சரியான மருந்தை நோயாளிகள் எடுத்து கொள்வது உறுதி செய்யப்படும் என்பதால் மருத்துவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.


Next Story