புதுமணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற கணவனும் பலி - சேலத்தில் சோகம்


புதுமணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற கணவனும் பலி - சேலத்தில் சோகம்
x
தினத்தந்தி 2 Jan 2024 3:24 AM GMT (Updated: 2 Jan 2024 3:43 AM GMT)

புதுமணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் காப்பாற்ற முயன்ற கணவனும் பலியான சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி, மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன்(27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், சந்தரபிள்ளைவலசு ஊராட்சி, பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி (19) என்பவருக்கும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்களுக்குள், புத்தாண்டு தினமான நேற்றிரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அபிராமி, தற்கொலை செய்து கொள்வதற்காக, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அருகிலுள்ள விவசாயி மாணிக்கம் என்பவரது தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்ட இவரது கணவர் அருள்முருகன் மனைவியை காப்பாற்ற அதே கிணற்றில் குதித்துள்ளார். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் துணையுடன் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் காப்பாற்ற முயன்ற கணவனும் பலியான சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story