என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சி - அன்புமணி ராமதாஸ்


என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சி - அன்புமணி ராமதாஸ்
x

என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

நடைபயணம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கா் விளைநிலத்தை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்த முயல்வதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. 2 நாள் விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை நேற்று வானதிராயபுரம் கிராமத்தில் தொடங்கினார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

நெய்வேலி பகுதியில் 49 கிராமங்களில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தை என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் 2 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.

என்.எல்.சி. நிர்வாகம் 66 ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்களிடம் 37 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்தி எடுத்துக் கொண்டது. இதுவரை மாற்று இடத்திற்கு யாருக்கும் பட்டா வழங்கவில்லை. வேலைவாய்ப்பும் வழங்கவில்லை.

ஆரம்ப காலத்தில் ஏதோ 1,800 பேருக்கு வேலை வழங்கியது. அவர்களும் தற்போது பணி ஓய்வு பெற்று விட்டனர். நான் இங்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரவில்லை. உங்களிடம் ஓட்டு கேட்கவில்லை. இந்த மண்ணின் மக்களுக்காக, குடிநீருக்காக, விவசாயத்தை காப்பதற்காக வந்திருக்கிறேன்.

தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே 10 அடியில் தண்ணீர் கிடைத்தது. ஆனால் தற்போது 1000 அடிக்கு கீழே தான் தண்ணீர் உள்ளது. ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறார்கள்.

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலத்தை பிடுங்கி கொடுக்க 2 அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உடந்தையாக செயல்பட்டு வருகிறார்கள். விவசாயத்தை பாதுகாக்கக்கூடிய அமைச்சர் அதற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் மக்களை பற்றி கவலைப்படாமல் என்.எல்.சி.க்கு நிலத்தை பிடுங்கி கொடுக்க துடிக்கிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க போகிறார்கள். இதை மத்திய அரசே நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறது. என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக தான் இந்த 25 ஆயிரம் ஏக்கா் நிலத்தை பறிக்க முயற்சி செய்கிறார்கள். ஏற்கனவே 1987-ம் ஆண்டு கையகப்படுத்திய 10 ஆயிரம் ஏக்கர் நிலம் அப்படியே உள்ளது. இதில் இருந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்க முடியும்.

எப்படி முடியும்?

அதை விட்டுவிட்டு தற்போது 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இந்த நிலத்தை கட்டுப்படுத்தி பிரபல தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முயற்சி நடக்கிறது. இதனால் இப்போது ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தருவதாகவும், 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் கூறி வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு தனியாரிடம் ஒப்படைக்க போகும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து எப்படி வேலைவாய்ப்பை கொடுக்க முடியும்.

என்.எல்.சி.க்கு நிலத்தை கொடுக்காவிட்டால் தமிழகம் இருண்டு விடும் என்று ஏமாற்றி வருகிறார்கள். தமிழகத்திற்கு ஒட்டுமொத்தமாக 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தான் உற்பத்தி செய்கிறது. அதிலிருந்து நமக்கு 40 சதவீதமாக 800 மெகாவாட் மின்சாரம் தான் தருகிறது. இப்படி இருக்கும்போது எப்படி தமிழகம் இருண்டதாக மாறும். இது 49 கிராமங்களின் பிரச்சினைகள் மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட மக்களின் பிரச்சினை.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.


Next Story