என்.எல்.சி. விவகாரம்: இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


என்.எல்.சி. விவகாரம்:  இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 July 2023 11:01 AM GMT (Updated: 31 July 2023 11:34 AM GMT)

என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, என்.எல்.சி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

என்.எல்.சி. விரிவாக்க பணி தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளாக என்.எல்.சி. பயன்படுத்தவில்லை என்பதால், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. தொல்லை தரக்கூடாது என்று கூறி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

முருகன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி பாமக வழக்கறிஞர் பாலு கோர்ட்டில் முறையீடு செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கோர்ட், என்.எல்.சி. வழக்கை அவசர வழக்காக இன்று மதியம் விசாரித்தது. அப்போது, என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு, என்.எல்.சி. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும். பிரமாண பத்திரம், மனுதாரர் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது


Next Story