சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல்


சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல்
x

பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சென்னை ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

அந்த உத்தரவில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

அவசரமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி கோரிக்கை வைத்தார். வழக்கு வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த நிலையில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தன்னுடைய மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story