சுற்றுலா தலம் அமைக்க பழவேற்காடு ஏரியில் அதிகாரிகள் ஆய்வு - அளவீடும் பணி மும்முரம்


சுற்றுலா தலம் அமைக்க பழவேற்காடு ஏரியில் அதிகாரிகள் ஆய்வு - அளவீடும் பணி மும்முரம்
x

பழவேற்காடு ஏரியில் சுற்றுலா தலம் அமைக்க வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடும் பணியை தொடங்கினர்.

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவில் 2-வது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக விளங்குகிறது. இந்த ஏரி 15367 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி ஆந்திராவில் இரண்டு பங்கும், தமிழ்நாட்டில் ஒரு பங்குமாக அமைந்துள்ளது. இந்த ஏரியில் 160 வகையான மீன் இனங்கள், 25 வகையான மிதவைப் புழுக்கள், பலவகையான இறால், நண்டு வகைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் கடல் தாவரங்கள் மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்கள் இங்கு அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த ஏரியில் இயற்கையாகவே பறவைகள் சரணாலயம் உள்ளதால் வெளிநாடு பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்கிறது. பழவேற்காட்டில் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அதிகமாக உள்ளதால் அதனைக் காண சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் பழவேற்காட்டிற்கு வந்து செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பழவேற்காடு ஏரி பகுதிகளில் சுற்றுலா தளம் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி பழவேற்காடு ஏரி பகுதியில் சர்வே எடுப்பதற்காக வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து அளவீடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அளவீடும் பணிகள் முடிவடைந்தவுடன் சுற்றுலாத்துறை சுற்றுலா தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story