புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி


புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி
x

புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி நடைபெற்றது. இதனை பக்தர்கள் நாளை வரை கண்டு ரசிக்கலாம்.

சென்னை

சென்னையை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறைமணி காட்சி நடைபெறும்.

மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலகில் மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்றும், இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் புரட்டாசி மாத பவுர்ணமியான நேற்று நிறைமணி காட்சி நடைபெற்றது. கோவில் கருவறை மற்றும் முன் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நிறைமணி காட்சியாக பந்தல் முழுவதும் தொங்க விடப்பட்டிருந்தது.

இந்த தோரணம் பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போலவும் காட்சி அளித்தது. சுமார் 5 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிறைமணி காட்சியை பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் இருந்தது. நேற்று தொடங்கிய இந்த நிறை மணி காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. பக்தர்கள் இன்றும், நாளையும் நிறைமணி காட்சியை கண்டு ரசிக்கலாம். கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.

முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.

இந்த நிறைமணி தரிசன காட்சியை கோவில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் திருவேற்காடு நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் அறங்காவலர் ரமேஷ் திறந்து வைத்தார். இதில் அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் பக்தர்கள் நிறை மணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் புகைப்படமாகவும், செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல் மாங்காட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலிலும் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு நிறை மணி காட்சி நடைபெற்றது. சுமார் 2 டன் அளவிலான பழங்கள், காய்கறிகள், இனிப்பு வகைகளை கட்டி தோரணங்களாக கோவில் உள்ளே தொங்கவிடப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பழங்கள், காய்கறிகள், இனிப்பு வகைகளால் ஆன நிறைமணி காட்சியை கண்டு ரசித்தனர்.பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த நிறைமணி காட்சியின் நிறைவு நாளில் நிறைமணி காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழங்கள், காய்கறிகள் அனைத்தையும் எடுத்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.


Next Story