பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 2 லட்சம் பேர் முன்பதிவு


பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 2 லட்சம் பேர் முன்பதிவு
x

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிக்கு விடப்பட்டுள்ள சிறப்பு பஸ்கள் நிரம்பி வருகின்றன.

சென்னை,

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் அரசு சார்பில் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து புறநகரங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 6,500 சிறப்பு பஸ்கள் 4 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை வருவதால் பெரும்பாலானவர்கள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பயணத்தை தொடங்குவார்கள். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து 6 சிறப்பு பஸ்நிலையம் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் அரசு பஸ்களில் ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.

பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பியதால் பிற போக்குவரத்துக் கழக பஸ்கள் முன்பதிவில் இணைக்கப்பட்டு விறுவிறுப்பாக புக்கிங் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம், சேலம், மதுரை, கும்பகோணம், கோவை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கும் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளன. 13-ந்தேதி வெளியூர் செல்ல அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிக்கு விடப்பட்டுள்ள சிறப்பு பஸ்கள் நிரம்பி வருகின்றன. 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 2 லட்சம் பேர் முன் பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்படக்கூடிய அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் ஆன்லைன் முன்பதிவில் மற்ற போக்குவரத்து கழக பஸ்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மேலும் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பஸ்களில் நடக்கும் விறுவிறுப்பான முன்பதிவு போல ஆம்னி பஸ்களில் நடக்கவில்லை. 13-ந் தேதிக்கு மட்டும் 70 சதவீதம் ஆம்னி பஸ்கள் நிரம்பி இருப்பதாகவும் மற்ற நாட்களில் அதிக இடங்கள் காலியாக இருப்பதாகவும் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமான அளவில் தான் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்ற நிலை உள்ளது. கூடுதலாக விடுவதற்கு இதுவரையில் வாய்ப்பு இல்லை என்று சங்கத்தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.


Next Story