பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்


பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:48 PM GMT)

பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

விழுப்புரம்

சிறப்பு பஸ்கள் இயக்கம்

பவுர்ணமி மற்றும் வார இறுதி விடுமுறை நாளை முன்னிட்டு பயணிகள், அதிகளவில் பஸ் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 35 பஸ்களும், புதுச்சேரியில் இருந்து 15 பஸ்களும், கடலூர், பண்ருட்டி, திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் இருந்து 15 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து 5 பஸ்களும், வேலூரில் இருந்து 20 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்களும், ஆரணி, ஆற்காட்டில் இருந்து 20 பஸ்களும், காஞ்சீபுரத்தில் இருந்து 20 பஸ்களும் ஆக மொத்தம் 395 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தேவைக்கேற்ப இயக்க ஏற்பாடு

மேலும் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், போளூர், வேலூர், காஞ்சீபுரம், திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 150 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story