தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்


தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

தொடர் விடுமுறையையொட்டி 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

திருச்சி

சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையாக வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை), 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை, 23-ந்தேதி ஆயுதபூஜை, 24-ந்தேதி விஜயதசமி வருகிறது. இதை முன்னிட்டு நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை சொந்த ஊருக்கு செல்லவும், பின்னர் விடுமுறை முடிந்து 24, 25-ந் தேதிகளில் திரும்பி வரவும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி திருச்சி, புதுக்கோட்டை உள்பட 12 ஊர்களில் இருந்து சென்னைக்கு (இருவழித்தடங்களில்) 300 சிறப்பு பஸ்களும், திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இருவழித்தடங்களில் 200 பஸ்களும் என்று 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

முன்பதிவு

விடுமுறை முடிந்து பயணிகள் திரும்பிச்செல்ல 24, 25-ந் தேதி ஆகிய 2 நாட்களில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 2 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளுக்கு வசதியாகவும், தேவையான பஸ் சேவையை அளிக்கவும் ஏதுவாக இருக்கும்.

செல்போன் செயலி

எனவே பயணிகள் www.tnstc.in இணையதளம் மூலமும் செல்போன் செயலி மூலமும் முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story