தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்... அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்...!

கோப்புப்படம்
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒருசில பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (22.11.2023) மற்றும் நாளை மறுநாள் (23.11.2023) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.