தேர்தலுக்காக சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி நாடகம் ஆடுகிறார் - உதயநிதி ஸ்டாலின்


தேர்தலுக்காக சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி நாடகம் ஆடுகிறார் - உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 26 March 2024 8:15 PM GMT (Updated: 26 March 2024 8:15 PM GMT)

மழை பாதிப்புக்கு நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியில் ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை என்று திருவண்ணாமலை பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து நேற்று திருவண்ணாமலையில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வுக்கு தூக்கம் போய் விட்டது என்று மோடி சொல்கிறார். ஆமாம் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. உங்களை வீட்டிற்கு அனுப்பும்வரை நாங்கள் தூங்க போவது இல்லை. எங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தூக்கம் பார்க்காமல் செய்ய தான் போகிறோம். உங்களை வீட்டிற்கு சென்று தூங்க வைக்கும் வரை நாங்கள் எங்களுடைய வேலையை செய்து கொண்டு தான் இருக்க போகிறோம்.

கடந்த 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.450 ஆக இருந்தது. தற்போது ரூ.1100 ஆக உள்ளது. தற்போது தேர்தல் வருகிறது என்றதும் நரேந்திர மோடி கியாஸ் சிலிண்டர் விலையில் ரூ.100-ஐ குறைத்து நாடகம் ஆடுகிறார். ஏமாந்து விடாதீர்கள், மீண்டும் ஜெயித்து விட்டு வந்தால் அவர் சிலிண்டருக்கு ரூ.500 ஏற்றினாலும் ஏற்றுவார். ஆனால் நம்முடைய முதல்-அமைச்சர் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். பெட்ரோல் 1 லிட்டர் ரூ.75-க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.65-க்கும் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "உதயநிதிக்கு வேற வேலையே இல்லை. தேர்தல் வந்தாலே போதும் ஒரு கல்லை தூக்கி காட்டுகிறார்" என்கிறார். நான் சொல்லிவிட்டேன் நீங்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை கட்டி முடிக்கும் வரையில் அந்த கல்லை தர மட்டேன் என்று. நான் எய்ம்ஸ் கல்லை தான் தூக்கி காட்டுகிறேன். ஆனால் நீங்கள் மோடியை பார்த்தால் பல்லை காட்டுகிறீர்கள். இப்படி பல்லை காட்டி மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் அவரிடம் விட்டு கொடுத்து விட்டார்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெருமழை பெய்தபோது, மோடி எட்டி கூட பார்க்கவில்லை. தற்போது 10 நாட்களாக தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வருகிறார்.

மழை பாதிப்புக்கு நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியில் ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. நாம் 1 ரூபாய் வரியாக கொடுத்தால் அவர்கள் நமக்கு கொடுப்பது வெறும் 29 பைசா மட்டும் தான். அதனால் நரேந்திர மோடியை நீங்கள் பெயர் சொல்லி கூப்பிடாதீர்கள். இனிமேல் அவர் பெயர் மிஸ்டர் 29 பைசா. இதுதான் நாம் அவருக்கு வைத்து உள்ள செல்ல பெயர். கடந்த 5 வருடத்தில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து ரூ.6½ லட்சம் கோடி வரி செலுத்தி உள்ளோம். ஆனால் மத்திய அரசு நமக்கு வெறும் ரூ.1½ லட்சம் கோடி தான் கொடுத்து உள்ளனர். இப்படி அனைத்திலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


Next Story