அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்-கலெக்டர் எச்சரிக்கை


அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்-கலெக்டர் எச்சரிக்கை
x

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் கற்பகம் எச்சரித்துள்ளார்.

பெரம்பலூர்

கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- மாவட்டத்தில் கனிமம் ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி செல்வதால் சாலை பழுதடைவதுடன், அவ்வப்போது விபத்துகள் நடைபெறுவதாக தொடர் புகார்கள் வருகிறது.

இவ்வாறு அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு இல்லாமல் கனிமம் ஏற்றி செல்லும் வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டுனர் உரிமம் ரத்து

வாகன ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் இதனை கண்காணித்து விதி மீறி செயல்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களில் எடுத்து செல்லப்படும் ஜல்லி, எம்.சாண்ட், கிராவல் உள்பட அனைத்து கனிமங்களும் சாலையில் சிந்தாமல், சிதறாமல் இருக்க முறையாக தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டும். அனைத்து குவாரி குத்தகை உரிமதாரர்களும் தங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் மட்டுமே குவாரி பணி மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அதிவேகமாக வாகனங்கள் இயக்குவதை தடுக்கவும் மற்றும் செல்போன் பேசி கொண்டு வாகனத்தை இயக்குவதை தவிர்க்கும் பொருட்டும் சம்பந்தப்பட்ட குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் தங்களது வாகனஓட்டுனர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, அதன் விவரத்தினை எழுத்துப்பூர்வமாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து குவாரி குத்தகை உரிமைதாரர்களும் தங்களுக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்ட குவாரி பகுதியை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பசுமை வளையம் அமைத்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வளவன், தங்கவேல், உதவி புவியியலாளர் இளங்கோவன், தனி வருவாய் ஆய்வாளர் குமரி ஆனந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story