கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சினைகள் தொடர்பாகவும் மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 94 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 43 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 16 மனுக்களும், பசுமை வீடு அடிப்படை வசதிகள் வேண்டி 25 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 136 மனுக்களும் என மொத்தம் 314 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story