பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள்: திருப்பூர் முதலிடம், ராணிப்பேட்டை கடைசியிடம்


பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள்: திருப்பூர் முதலிடம், ராணிப்பேட்டை கடைசியிடம்
x

கோப்புப்படம்

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 96.38% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். பிளஸ்-1 பொதுத்தேர்வில் மொத்தம் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.36%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 86.99% ஆக உள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் பிளஸ்-1 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் 84.97% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகள் 93.20% தேர்ச்சி பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 88.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 125 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில் 108 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 96.38% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 82.58% தேர்ச்சி பெற்று கடைசியிடம் பிடித்துள்ளது. 96.18% தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடமும் கோவை மாவட்டம் 95.73% தேர்ச்சியுடன் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.


Next Story