பிளஸ்-2 தேர்வில் தோல்வியால் காதலன் இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை


பிளஸ்-2 தேர்வில் தோல்வியால் காதலன் இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை
x

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் பிளஸ்-1 மாணவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லி. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகள் நந்தினி (வயது 16). இவர், பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி நந்தினி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நசரத்பேட்டை போலீசார் நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆவடி கோவர்த்தனகிரி, பாரதி நகர், 1-வது தெருவைச் சேர்ந்த தேவா (17) என்பவர், பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மாணவி நந்தினி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தனது காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த நந்தினி, அந்த விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story