பிரதமர் மோடி வருகை: ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள கடைகள் இன்றும், நாளையும் மூடல்


பிரதமர் மோடி வருகை: ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள கடைகள் இன்றும், நாளையும் மூடல்
x

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி,

3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டுக்கு வருகிறார். சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் அவர், ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.

சனிக்கிழமை காலை 10.55 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். அங்கு ரெங்கநாதரை தரிசித்துவிட்டு, அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் கடைகளுக்கு விடுமுறை என கடைகளின் உரிமையாளர்கள் பேப்பரில் எழுதி ஒட்டியுள்ளனர். சனிக்கிழமை மதியம் வரை கடைகளை மூட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

பிரதமரின் வருகையையொட்டி திருச்சி மாநகர எல்லைக்குள் வருகிற 20-ந்தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தடை விதித்துள்ளார். இதேபோல் ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள பிரசாத கடைகள், புத்தக கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.


Next Story