பிரதமர் வருகை - திருச்சியில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை


பிரதமர் வருகை - திருச்சியில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
x

வருகிற 21-ந் தேதி பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி,

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு முதல் நாளான 21-ந் தேதி பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னதாக 108 வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசித்துவிட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி ஸ்ரீரங்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் விமான நிலையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் இன்று (ஜன.17) முதல் 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story