மெரினா கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் கஞ்சாவுடன் 2 பேர் கைது - தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்


மெரினா கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் கஞ்சாவுடன் 2 பேர் கைது - தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 24 Sep 2023 4:55 AM GMT (Updated: 24 Sep 2023 7:03 AM GMT)

மெரினா கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் கஞ்சாவுடன் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

சென்னை

சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி நிறுத்தினார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோவில் இருந்த 2 பேரின் பையை சோதனையிட்டனர். அதில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

இதையடுத்து கஞ்சா வைத்திருந்த 2 பேரையும் ரோந்து போலீசார் பிடித்து மெரினா போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் இரவு ரோந்து இன்ஸ்பெக்டர் வகிதா பேகம் விசாரணை நடத்தினார்.

இதில் அவர்கள் தெலுங்கானா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ரெஹல் மஹாரானா (வயது 18) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்கள், விஜயவாடாவில் இருந்து செகந்திரபாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்ததும், பின்னர், கேளம்பாக்கத்தை சேர்ந்த சிவா என்ற கஞ்சா வியாபாரியிடம் ஒப்படைப்பதற்காக சென்டிரலில் இருந்து வாடகை ஆட்டோ மூலம் புறப்பட்டு வந்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் ஆட்டோவையும், 10 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story