பெண் காவலருக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்


பெண் காவலருக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்
x

பணகுடி காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவரான திவ்யா, ராதாபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி புரிந்து வந்தார். இவருக்கும் செட்டிகுளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில், ராதாபுரம் காவல் நிலையத்தில் இருந்து பணகுடி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 7 மாத கர்ப்பிணியாக காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற திவ்யாவுக்கு காவல் நிலையத்தில் வைத்தே வளைகாப்பு நடத்த பணகுடி காவல்நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் அருண் ராஜா தலைமையில் திவ்யாவுக்கு காவல்நிலையத்தில் வைத்து வளைகாப்பு நடத்தப்பட்டது. காவலர் திவ்யாவுக்கு வளையல்கள் அணிவித்து சந்தனம் குங்குமம் வைத்து விருந்து உபசாரத்துடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story