முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி போலீஸ்நிலையம் முற்றுகை


முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி போலீஸ்நிலையம் முற்றுகை
x

பெண் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள அத்தங்கிகாவனூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் சாந்தி (வயது 46). தி.மு.க.வை சேர்ந்தவர். இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பணிகள் மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி ஆணை பெற்றுக்கொண்டு வந்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று தே.மு.தி.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் அவரது உறவினர்கள் பணி ஆணை பெற்ற இடத்தில் உழுது பயிர் செய்தனர். இவ்வாறு செய்வது நியாயமா? என நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, அவரது மகன் கவியரசு ஆகியோர் பயிர் செய்த இடத்திற்கு சென்று தங்கராஜிடம் கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமையில் ஏராளமானோர் வெங்கல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகா தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோரை அழைத்து வந்து முறையாக விசாரணை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்தனர். இதன் பின்னர்அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

1 More update

Next Story