ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று குவியும் அரசியல் தலைவர்கள்... அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!


ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று குவியும் அரசியல் தலைவர்கள்... அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!
x

தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந்தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார்.

இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே 3 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்டமாக வரும் 21-ந்தேதி முதல் மீண்டும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்டமாக எடப்பாடி பழனிசாமி வரும் 24, 25 ஆகிய 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்றும் நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் அண்ணாமலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் பகுதியிலும், இரவு 7 மணிக்கு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும், இரவு 8 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு பகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

தே.மு.தி.க. சார்பில் மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரேமலதா விஜயகாந்த் இன்று மாலை வீரப்பன்சத்திரம், திருநகர் காலனி, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ். நகர், கிருஷ்ணா தியேட்டர், வி.வி.சி.ஆர் நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதே போல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரசாரம் வரும் 25-ந் தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story