வளசரவாக்கத்தில் பால் வியாபாரி கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு


வளசரவாக்கத்தில் பால் வியாபாரி கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு
x

வளசரவாக்கத்தில் பால் வியாபாரி கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை

சென்னை வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 35). பால் வியாபாரியான இவருக்கும், வளசரவாக்கம், பெத்தானியா நகரைச் சேர்ந்த கோபி என்ற கர்ணா (48) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

கடந்த 8-3-2003 அன்று கோபி, வளசரவாக்கம், ராமகிருஷ்ணா நகர் பகுதியில் பால் வியாபாரி தட்சிணாமூர்த்தியை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கில் வளசரவாக்கம் போலீசார் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடியான கோபி மீது கொலை, கொல்லை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கோபி, அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். பின்னர் 2019-ம் ஆண்டு திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த கோபியை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில், கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கோபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் கொலையான தட்சிணாமூர்த்தியின் மகன் ராமநாதன் பக்ரைனில் இருந்ததால் கோர்ட்டில் சாட்சியத்துக்கு ஆஜராகமல் இருந்து வந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி போலீசாரால் அழைத்து வரப்பட்டு சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் புரட்சிதாசன் ஆஜரானார்.


Next Story