மழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு


மழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
x

போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்க தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் (03.12.2023) மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

சென்னை நகர் முழுவதும் 1,794 மின்பாதைகளில் 694 மின்பாதைகளில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை புயலின் தாக்கம் குறையவில்லை என்பதால் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் முழுமையாக வழங்க இயலவில்லை. போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்க 5,527 மின்வாரிய களப்பணியாளர்கள் 1,176 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 8 வருடங்களில் இல்லாத அளவிற்கு சென்னையில் தற்போது சராசரியாக 28.4 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. மின்பாதைகளிலும், பில்லர் பெட்டிகளிலும் பழுதுகள் ஏதும் ஏற்படவில்லை. இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. புயல், மழையின் தாக்கம் குறைந்த 2 மணி நேரத்திற்குள் தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story