இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்


இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
x

இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21-3-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (22-3-2024) கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிப்பதாகவும், கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் வேதனையோடு குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், 21-3-2024 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள முதல்-அமைச்சர், இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கைச் சிறைகளில் வாடும் மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்திடவும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story