தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்


தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x

தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய பண்பாட்டுச் சீரழிவு

திருமண அரங்குகள், விளையாட்டு அரங்குகள், விருந்துக்கூடங்கள் ஆகியவற்றில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுவகைகளை இருப்பு வைக்கவும், பரிமாறவும் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பில் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு திருமண நிகழ்வுகள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் மது பரிமாற அனுமதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து எழுந்த எதிர்ப்பு, பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பு ஆகியவற்றுக்கு அஞ்சிதான் இந்த மாற்றத்தை தமிழக அரசு செய்துள்ளது. இது பா.ம.க.வுக்கும், மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றி. அதேநேரத்தில் இந்த வெற்றி முழுமையானது அல்ல.

தமிழக அரசு உள்துறையின் அரசாணை எண் 9-ல் குறிப்பிடப்பட்டு உள்ளவாறு திருமண நிகழ்வுகள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் மது பரிமாற அனுமதிக்கப்படாது என்று அறிவித்துள்ள தமிழக அரசு அதேநேரத்தில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வகைகளை இருப்பு வைக்கவும், பரிமாறவும் அனுமதிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. புதிய பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை தேவையற்றது.

எந்த வகையில் நியாயம்?

ஐ.பி.எல். உள்ளிட்ட போட்டிகளில் மது உள்ளிட்ட போதைப்பொருட்களின் விளம்பரங்களை காட்சிப்படுத்தவே அனுமதிக்கக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன். அவ்வாறு இருக்கும்போது அரங்கத்திலேயே மதுவெள்ளத்தை கட்டவிழ்த்து விடத் துடிப்பது எந்த வகையில் நியாயம்?

பன்னாட்டு, தேசிய மாநாடுகள், விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வெளிநாட்டவர்கள் மது அருந்தும் வழக்கம் கொண்டவர்கள் என்பதற்காக நிகழ்விடத்திலேயே நாம் கடை விரிக்கத்தேவையில்லை. அது நமது பண்பாடும் இல்லை என்பதை அரசு உணரவேண்டும்.

மது இல்லாத தமிழகம் அமைக்கவேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். அதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும். அதன் முதல்கட்டமாக பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வகைகளை இருப்பு வைக்கவும், பரிமாறவும் அனுமதிக்கும் உள்துறையின் 9 மற்றும் 11 எண் கொண்ட அரசாணைகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

மதுவிலக்கு

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற மதுவிலக்குத்துறை அமைச்சரின் அறிவிப்பை நடப்பு ஏப்ரல் மாதத்துக்குள் செயல்படுத்த வேண்டும். மீதமுள்ள 4 ஆயிரத்து 829 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கான காலஅட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட்டு அதை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story